×

பொத்துமரத்து ஊரணியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி, டிச.10: சிவகாசி நகரின் மைய பகுதியில் உள்ள பொத்துமரத்து ஊரணியில் வேன் ஸ்டாண்ட் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இந்த ஊரணியில் மரங்கள் அடர்ந்து முளைத்திருந்தன. இதனால் நகரின் மைய பகுதியில் குளிர் தரும் சோலைவனம் போல் ஊரணி இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  இங்குள்ள வேன் ஸ்டாண்ட்டை அகற்றி ஊரணியை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ள பட்டது. பல லட்சம் மதிப்பில் ஊரணியில் முளைத்திருந்த முட்செடிகள், படர் தாமரை செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே பொத்து மரத்து ஊரணி ஆழப்படுத்தும் பணியின் போது மழை காரணமாக ஊரணியில் தணணீர் நிரம்பியது. இதனால் ஆழப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் பொத்துமரத்து ஊரணி ஆழப்படுத்தும் பணியை நகராட்சி நிர்வாகம் அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

இதனால் ஊரணி கரையில் பூக்கடை, டீக்கடை, கோவில் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். தற்போது சிவகாசி பகுதியில் பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. நகராட்சி நிலத்தடி ஆதராமான பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் சிவகாசி நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. போர்வெல் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் நகரில் உள்ள நிலத்தடி நீர் ஆதார ஊரணிகள், கண்மாய்கள், தெப்பங்களை மீட்டு பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வருதில்லை. பொத்துமரத்து ஊரணியில் நாராணாபுரம், போஸ் காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளின் மழை நீர் நிரம்பி வருகிறது. ஆனால் ஊரணியில் கழிவு நீர் கலப்பதால்  ஊரணி மாசடைந்து வருகிறது. எனவே பொத்து மரத்து ஊரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், ஊரணி கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், ஊரணியை ஆழப்படுத்தவும்  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : woodland ,
× RELATED அரசு பள்ளியில் புகுந்து சமைத்து...